முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கரூர் மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2019-11-02 22:30 GMT
கரூர்,

கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் கந்தசஷ்டி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. கரூர் மேற்குமடவளாகத்தில் ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகபெருமான் எழுந்தருளினார். அவருக்கு பல்வேறு வகையான பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சூரபதுமன் என்கிற அசுரன் தன்னை போரில் யாரும் வெல்ல முடியாது என்கிற மனோபாவத்தில் கையில் கேடயம், வாள் உள்ளிட்டவற்றை ஏந்தி எழுந்தருளினார். அப்போது போர்களத்தில் மோதிக்கொள்வது போல முருகபெருமான், சூரபதுமனின் பல்லக்குகள் அங்கும் இங்கும் தூக்கி செல்லப்பட்டன. முடிவில் தர்மமே வெல்லும் என்பதற்கேற்ப அசுரர்களிடமிருந்து மக்களை காப்பதற்காக தனது வேலால் சூரபதுமனின் தலையை முருகபெருமான் துண்டித்தார். அப்போது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா... என்கிற கோஷங்களை பக்தர்கள் விண்ணதிர எழுப்பினர். 4 மாட வீதிகளிலும் சூரபதுமனை முருகன் வேலால் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

புகழிமலை முருகன் கோவில்

இதேபோல கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே புகழிமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்தசஷ்டியையொட்டி சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி நேற்று முருகனுக்கு பால், பழம், விபூதி உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மாலையில் முருகன் மலையில் இருந்து கோவில் அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து இரவு முருகன் பல்லக்கில் போர் களத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து முருகன் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல வெண்ணைமலை முருகன் உள்ளிட்ட கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

மேலும் செய்திகள்