குட்வின் நகைக்கடையில் போலீசார் சோதனை திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டது அம்பலம்

குட்வின் நகைக்கடையில் போலீசார் நடத்திய சோதனையில், நகைக்கடை உரிமையாளர்கள் திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

Update: 2019-11-02 22:15 GMT
அம்பர்நாத்,

தானே, டோம்பிவிலி, பால்கர் மற்றும் மும்பை உள்பட 12 இடங்களில் குட்வின் என்ற நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்த நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் பல்வேறு நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்தனர். இந்த நிலையில் கடைகள் அனைத்தும் ஒரே நாளில் அடைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் குட்வின் உரிமையாளர்கள் கோடிக்கணக்கிலான பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கு விசாரணை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குட்வின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தனர்.

இந்தநிலையில் போலீசார் அவர்கள் மீதான ஆதாரங்களை திரட்ட டோம்பிவிலியில் உள்ள நகைக்கடையை திறந்து பார்த்தனர். அப்போது அந்த கடை காலியாக கிடந்தது. கடையில் எந்தவொரு நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால் அவர்கள் திட்டமிட்டு மோசடி செய்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த பாதிக்கப்பட்டவர்கள் காலியாக கிடந்த கடையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்