தென்காசியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைவது எங்கே? அதிகாரிகள் நேரில் ஆய்வு

தென்காசியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எங்கே அமைப்பது? என்பது குறித்து அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.

Update: 2019-11-02 22:15 GMT
தென்காசி,

தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் சமீபத்தில் அறிவித்தார். இதன்பிறகு அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளும் விதத்தில் தனி அதிகாரியாக அருண் சுந்தர் தயாளன் நியமனம் செய்யப்பட்டார். அவரது தலைமையில் பொதுமக்களிடம் நெல்லை மற்றும் குற்றாலத்தில் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியில் ஏற்கனவே உள்ள அரசு இடத்தில் அமைக்கலாம் என செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். மேலும் வேறு எங்கு அமைக்கலாம்? என 15 இடங்களை வருவாய்த்துறையினர் தேர்வு செய்து வைத்திருந்தனர். இந்த இடங்களை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் காலையில் இருந்து மதியம் வரை இந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் ஷில்பா, தென்காசி தனி அதிகாரி அருண் சுந்தர் தயாளன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார், தாசில்தார்கள் சண்முகம், அழகப்பராஜா மற்றும் அலுவலர்கள் சென்றனர்.

செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர், கொடிக்குறிச்சி, ஆய்க்குடி, பாட்டாகுறிச்சி, ஆயிரப்பேரி ஆகிய அனைத்து இடங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், வருவாய்த்துறையினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க இடங்களை தேர்வு செய்து அதன் வரைபடங்களையும் கொடுத்தனர். இந்த இடங்களை நாங்கள் பார்வையிட்டோம். ஆய்க்குடியில் 20 ஏக்கர் நிலத்தை தனியார் ஒருவர் அரசுக்கு இலவசமாக தருவதாக கூறியுள்ளார். ஆயிரப்பேரியில் ஒரே இடத்தில் அரசு இடம் உள்ளது. இவை அனைத்தையும் ஆய்வு செய்தோம். இதுகுறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்போம். இதுகுறித்து அரசு முடிவு செய்யும் என்றார்.

மேலும் செய்திகள்