தூத்தூரில் ராட்சத அலையில் சிக்கி பெண் சாவு

தூத்தூரில் ராட்சத அலையில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-11-03 23:15 GMT
குளச்சல்,

நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு, வாவறை பகுதியை சேர்ந்தவர் நேசையன் (வயது 64), பள்ளி வேன் டிரைவர். இவருடைய மனைவி பால்தங்கம்(54). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

நேற்று காலையில் நேசையன் கோவிலுக்கு செல்வதற்காக மனைவியை அழைத்தார். ஆனால், பால்தங்கம் மறுத்ததால் நேசையன் மட்டும் கோவிலுக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்து பால்தங்கம் மாயமாகி இருந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த நேசையன் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அலையில் சிக்கி சாவு

இந்தநிலையில் தூத்தூர் கடற்கரையில் அலையில் சிக்கி ஒரு பெண் இறந்து கிடப்பதாக குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, பிணமாக கிடந்தவர் பால்தங்கம் என்பது தெரிய வந்தது.

அவர் கடற்கரையில் சென்றபோது ராட்சத அலையில் சிக்கி இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்