மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார விழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று நடந்தது. அப்போது விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2019-11-04 21:30 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள் கோவிலில் 10 நாட்கள் பூதத்தாழ்வார் அவதார விழா நடந்து வருகிறது. 9-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. அப்போது, தலசயன பெருமாள் மற்றும் உற்சவரான ஸ்ரீபூதத்தாழ்வார் அலங்கார கோலத்தில் தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக நான்கு மாட வீதிகளில் தேர் அசைந்தாடி சென்ற போது, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

அப்போது அங்கு திரண்டு இருந்த திரளான பக்தர்கள் கற்பூர ஆராதனை செய்து, தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர்.

விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மாமல்லபுரம் குலசேகரஆழ்வார் ராமானுஜர் அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் நெய்குப்பி கிருஷ்ணராமானுஜதாசர் தலைமையில் 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து, சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு தேர் நிலையை வந்தடைந்தது. விழாவில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் தெப்ப உற்சவ கமிட்டி தலைவர் என்.ஜனார்த்தனம், மாமல்லபுரம் அ.தி.மு.க. நகர செயலாளர் ஏ.கணேசன், ஸ்ரீகருக்காத்தம்மன் கோவில் தர்மகர்த்தா சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி எஸ்.சங்கர் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்