விழுப்புரம் மாவட்டத்தில், திருவள்ளுவர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 8 திருவள்ளுவர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2019-11-05 22:15 GMT
விழுப்புரம், 

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு யாரோ சேறு, சகதியை வீசி அவமதிப்பு செய்ததுடன் பேப்பரால் சிலையின் கண்களையும் மூடிவிட்டு சென்று விட்டனர்.

இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கண்டித்தும், அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினரும், மாணவ– மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர்.


இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகரம் மற்றும் உட்கோட்டத்தில் உள்ள 3 திருவள்ளுவர் சிலைகள், திண்டிவனம், செஞ்சி ஆகிய இடங்களில் உள்ள தலா ஒரு சிலைகள், திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் உள்ள 3 சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்