பாப்பிரெட்டிப்பட்டியில், மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி

பாப்பிரெட்டிப்பட்டியில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலியானார்.

Update: 2019-11-05 22:15 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வீரபத்திரன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி தேவகி. இவர்களது மகள் பரணிஸ்ரீ (வயது11). சிறுமி பாப்பிரெட்டிப்பட்டி ஜீவா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தாள். மாணவிக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.

இதனால் லோகநாதன் தனது மகளுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்து வந்தார். இருப்பினும் சிறுமிக்கு காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிறுமி சேர்க்கப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி பரணிஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இதனால் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி இறந்ததால் ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் வீரபத்திரன் கோவில் தெருவில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்