வேடசந்தூர் அருகே, சாலையோர பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து டிரைவர் பலி

வேடசந்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியானார்.

Update: 2019-11-05 22:45 GMT
வேடசந்தூர்,

கன்னிவாடி அருகே உள்ள மணியகாரன்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 22). இவர், வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் நூல் மில்லில் ஜீப் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தொழிலாளர்களை எரியோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இறக்கி விட்டு மில் நோக்கி சதீஷ் குமார் ஜீப்பில் சென்று கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் வேடசந்தூர்-திண்டுக்கல் சாலையில் காக்காத்தோப்பு பிரிவு அருகே ஜீப் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், பாலத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மருதை தலைமையிலான தீயணைப்பு படையினரும், வேடசந்தூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கவிழ்ந்த ஜீப்பை கயிறு கட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும் சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்