அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பண்ணை குட்டைகள்

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பண்ணை குட்டைகள் கலெக்டர் ரத்னா தகவல்.

Update: 2019-11-05 22:30 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், நடப்பு ஆண்டின் நீடித்த நிலையான மானாவாரி விவசாயத்திற்கான திட்டத்தின்கீழ், 100 சதவீத மானியத்தில் 20 பண்ணை குட்டைகள் அமைக்கப்பட உள்ளது. பண்ணை குட்டைகளை நீர் ஆதாரமாகக் கொண்டு தெளிப்பு நீர் பாசன அமைப்பை நிறுவி, பயிர்களுக்கு சிக்கனமான முறையில் நீர் பாய்ச்சுவதன் மூலம் கூடுதலான பாசன வசதியை ஏற்படுத்திக் கொள்வதோடு, மீன்கள் வளர்த்து கூடுதல் வருமானத்தையும் பெறலாம். 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், 2 மீட்டர் ஆழம் கொண்ட பண்ணை குட்டை அமைப்பதற்கு ரூ.1 லட்சம் செலவாகிறது. ஆண்டிபட்டுகாடு, கருப்பிலைக்கட்டளை, ஆலந்துரையார்கட்டளை, புதுப்பாளையம், ரெட்டிப்பாளையம், நாகமங்கலம் பெரிய திருகொண்டம், கருப்பூர்சேனாதிபதி, காவனூர், பெரிய நகலூர், விளாங்குடி, சாத்தமங்கலம், வெற்றியூர், பளிங்காநத்தம், வென்கையூர், அயன்சுத்தமல்லி, நடுவலூர் (கிழக்கு, மேற்கு), ஸ்ரீபுரந்தான்(வடக்கு), உள்ளியக்குடி, நாயகனைப்பிரியாள், பருக்கல்(கிழக்கு, மேற்கு), அணைகுடம், மணகெதி, செந்துறை, பெரியகுறிச்சி, சன்னாசிநல்லூர், தளவாய் (வடக்கு) ஆகிய கிராமங்களில் 100 சதவீத மானியத்துடன் அரசு செலவில் விவசாயிகளுக்கு பண்ணை குட்டைகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது. பண்ணை குட்டை அமைக்க விரும்பும் அரியலூர், திருமானூர் வட்டார விவசாயிகள் அரியலூர் வேளாண்மை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மற்றும் செந்துறை, தா.பழூர் வட்டார விவசாயிகள் ஜெயங்கொண்டம் வேளாண்மை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் தங்களது சிட்டா, அடங்கல் மற்றும் புல வரைபட நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து முன்னுரிமை அடிப்படையில் 100 சதவீத மானியத்துடன் பண்ணை குட்டை அமைத்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்