சத்தி அருகே, லாரி மீது மற்றொரு லாரி மோதல்; டிரைவர் சாவு - 2 பேர் படுகாயம்

சத்தி அருகே லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

Update: 2019-11-06 22:45 GMT
சத்தியமங்கலம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு கோழிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அங்கு கோழிகளை இறக்கிய பின்னர் திரும்ப பல்லடம் நோக்கி வந்து கொண்டு இருந்தது. லாரியை கிளனர் சந்தோஷ் (வயது 23) என்பவர் ஓட்டினார். அருகில் லாரியின் டிரைவர் பல்லடத்தை சேர்ந்த கருப்புசாமி (35), சுமைதூக்கும் தொழிலாளி சுப்பிரமணி (35) ஆகியோர் உட்கார்ந்து வந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி ரோடு முருகன் கோவில் மேடு என்ற இடத்தில் நேற்று அதிகாலை 3½ மணி அளவில் லாரி வந்துகொண்டு இருந்தது. அப்போது முன்னால் ஒரு லாரி சென்றுகொண்டு இருந்தது. இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக சந்தோஷ் ஓட்டிய லாரி முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் சந்தோஷ், கருப்புசாமி, சுப்பிரமணி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் டிரைவர் கருப்புசாமி இறந்தார். சுப்பிரமணி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். சந்தோஷ் சத்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தசம்பவம் குறித்து சத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த கருப்புசாமிக்கு ராதிகா (33) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்