மன்னார்குடி வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

மன்னார்குடி வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் கலெக்டர் ஆனந்த் ஆய்வு செய்தார்.

Update: 2019-11-07 23:00 GMT
மன்னார்குடி,

மன்னார்குடி வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள ரூ.50 லட்சம் மதிப்பிலான அதிக திறன் கொண்ட மரம் அறுக்கும் 100 எந்திரங்களையும் மாவட்ட கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் எந்திரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறதா? என செயற்பொறியாளரிடம் கேட்டறிந்து, பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து அவர், மன்னார்குடி அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவிகள் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். விடுதியில் உணவு, குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.

மாணவிகளுக்கு அறிவுரை

பின்னர் மாணவிகளிடம் கல்லூரி காலங்களில் நன்கு பயில வேண்டும். அரசு வேலை வாய்ப்பு தேர்வுகள் குறித்து அறிவிப்புகளை தெரிந்து கொண்டு போட்டி தேர்வுகளை எழுத வேண்டும். மேலும் தினசரி செய்திதாள்களை தொடர்ந்து படித்து பழக வேண்டும். பட்டப்படிப்பில் முயற்சி செய்து நன்கு பயின்றால் வாழ்க்கையில் உயரலாம் என அவர் அறிவுரை கூறினார். மாணவிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்கள் விடுதியில் உள்ள மாணவர்களிடமும், கலெக்டர் ஆனந்த் அடிப்படை வசதிகள் மற்றும் உணவு வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் சமயலறை தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஆதிதிரா விடர் நலத்துறை அலுவலர் ஜெயதீபன், வேளாண்மை பொறியியல் துறை செயற் பொறியாளர் ராமநாதன், மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, தாசில்தார் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்