கும்மிடிப்பூண்டி அருகே தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனை சந்தேக சாவாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-11-07 22:15 GMT
கும்மிடிப்பூண்டி,

சென்னை ரெட்டேரியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 24). பெயிண்டர். இவருக்கும் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அடுத்த மேல்முதலம்பேடு காலனியை சேர்ந்த கவுசல்யா (41) என்பவரின் மகள் ரம்யா என்கிற ராஜலட்சுமிக்கும் (20) கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு வீட்டோடு மாப்பிள்ளையாக தனது மாமியார் வீட்டிலேயே நாகராஜ் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ரம்யா சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ரம்யாவின் சகோதரர் ரஞ்சித் (22) தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்