ஓட்டப்பிடாரம் அருகே பரிதாபம்: கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை

ஓட்டப்பிடாரம் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை செய்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-11-07 22:45 GMT
ஓட்டப்பிடாரம், 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்துள்ள பசுவந்தனை அருகே உள்ள போடுபட்டி காலனி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி சாவித்திரி. இவர்களின் 3-வது மகள் விஜயலட்சுமி (வயது 27). இவருக்கும் எப்போதும் வென்றான் பகுதியைச் சேர்ந்த முத்துபாண்டி (33) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முத்துபாண்டி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின்னர் விஜயலட்சுமி தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு தினமும் கணவரை நினைத்து சோகத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது விஜயலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வீட்டுக்கு வந்த மாரியப்பன், தனது மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக பசுவந்தனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டப்பிடாரம் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்