கொடைரோடு அருகே, கூலித்தொழிலாளி அடித்து கொலை?

கொடைரோடு அருகே கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-11-08 22:15 GMT
கொடைரோடு,

கொடைரோடு அருகே உள்ள ஊத்துபட்டியை சேர்ந்த வீரய்யா மகன் லட்சுமணன் (வயது 38). இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியே சென்ற லட்சுமணன், அதன்பிறகு இரவு வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அந்த கிராமத்தில் உள்ள நாடக மேடையில் லட்சுமணன் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், லட்சுமணன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணன் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்