கும்பகோணம் அருகே, மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி

கும்பகோணம் அருகே மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலியானது.

Update: 2019-11-08 22:30 GMT
கும்பகோணம், 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவை சேர்ந்தவர் வினோத்(வயது35). இவர் ஒரு தனியார் வங்கியின் சென்னை கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பூர்ணா(29). இவர்களது மகள் கிருத்தன்யா(வயது2). கடந்த 4-ந் தேதி கிருத்தன்யாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவளை கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் கிருத்தன்யாவை தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கிருத்தன்யா இறந்தாள். கிருத்தன்யா டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கும்பகோணம் நகராட்சி நகர்நல அலுவலர் பிரேமா, குழந்தையின் பெற்றோரிடம் குழந்தைக்கு ஏற்பட்ட நோய் மற்றும் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

இது குறித்து கும்பகோணம் நகராட்சி நகர்நல அலுவலர் பிரேமா நிருபர்களிடம் கூறியதாவது:-

குழந்தை கிருத்தன்யாவுக்கு டாக்டர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். குழந்தைக்கு டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறி எதுவும் இல்லை என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குழந்தையின் முதுகு தண்டுவடத்தில் சோதனை செய்ததில் வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. எனவே மூளை காய்ச்சலுடன் அதிக வலிப்பு நோய் இருந்ததால் தான் குழந்தை இறந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்