கொங்கணாபுரத்தில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்

கொங்கணாபுரத்தில் இன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

Update: 2019-11-08 22:45 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஒன்றியங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கும் முகாம் நடந்தது. இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

இந்தநிலையில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மாவட்ட கலெக்டர் ராமன், எம்.எல்.ஏக்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) தர்மபுரியில் நடைபெறும் அமைச்சர் கே.பி.அன்பழகன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். பின்னர் அவர் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் அவர் அங்கிருந்து காரில் சேலம் வருகிறார்.

பின்னர் அவர் சேலம் 3 ரோடு அருகேயுள்ள வரலட்சுமி மகாலில் நடைபெறும் வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. மனோன்மணி இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். அன்று இரவு சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறுநாள் (12-ந் தேதி) காலை ஓமலூர் விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

மேலும் செய்திகள்