கோவையில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி மூதாட்டி உள்பட 2 பேர் சாவு

கோவையில் மின்சாரம் தாக்கி மூதாட்டி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-11-09 22:45 GMT
வடவள்ளி, 

கோவை சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது 65). இவருடைய கணவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கண்ணம்மாளுக்கு ஒரு மகன் உள்ளார். கண்ணம்மாள் நேற்றுக்காலை அங்குள்ள தோட்டத்துக்கு சென்று மின் மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்ச் போட்டார். ஆனால் மின் மோட்டார் இயங்கவில்லை.

இதனால் அவர் மின் ஒயரை கத்தியால் சீவி உள்ளார். அப்போது திடீரெனறு அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் அலறியபடி கீழே விழுந்தார். அவரது சத்தம் கேட்டு தோட்டத்தில் வேலை செய்த அதேப்பகுதியை சேர்ந்த சுரே‌‌ஷ் (24) என்பவர் ஓடி வந்து கண்ணம்மாளை மீட்க முயன்று உள்ளார். இதில் அவரையும் மின்சாரம் தாக்கியது.

இதில் கண்ணம்மாள், சுரேஷ் ஆகிய 2 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்த தகவலின் பேரில் வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், மின்சாரம் தாக்கி இறந்த கண்ணம்மாள், சுரே‌‌ஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்