கோவை, ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது

ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

Update: 2019-11-10 22:30 GMT
பாலக்காடு, 

பாலக்காடு மாவட்டம் சொர்னூர் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருக்கும் பயணிகள், மற்றும் ரெயிலில் பயணம் செய்பவர்களிடம் அடிக்கடி செல்போன் திருட்டு போனது. இது தொடர்பாக சொர்னூர் ரெயில்வே போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது.

இதையடுத்து ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு ‌ஷர்புதீன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் ரெயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலீசார் ரெயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ரெயில் நிலைய நடைமேடையில் சுற்றித்திருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணமாக பதிலளித்ததாக தெரிகிறது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் ரெயில்வே போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பாரபுரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 24), செருதுருத்தியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (26), ‌ஷமீர் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்