தாளவாடி அருகே, மின் வேலியில் சிக்கி யானை சாவு

தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி யானை இறந்தது.

Update: 2019-11-10 22:30 GMT
தாளவாடி, 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட மலைக்கிராமம் முதியனூர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். விவசாயி.

இவருக்கு வனப்பகுதியை ஒட்டி தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளார். காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தோட்டத்துக்குள் புகுந்து மக்காச்சோள பயிரை சேதப்படுத்தாமல் தடுக்கும் வகையில் இவர் தன்னுடைய தோட்டத்தை சுற்றிலும் மின் வேலி அமைத்து உள்ளார்.

இந்த நிலையில் தாளவாடி வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று வெளியேறி மாதேவன் தோட்டத்துக்கு வந்து உள்ளது. அப்போது அங்குள்ள மின் வேலியில் சிக்கி அந்த யானை இறந்துவிட்டது.

இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர். மேலும் கால்நடை ஆஸ்பத்திரி டாக்டர் அசோகன் சம்பவ இடத்துக்கு சென்று யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் யானையின் உடல் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. இதுபற்றி டாக்டர் அசோகன் கூறுகையில், ‘இறந்து கிடந்த யானை 40 வயது உடைய பெண் யானை ஆகும்,’ என்றார். வனத்துறையினர் தோட்ட உரிமையாளரான மாதேவனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்