சுற்றுச்சுழல் துறை சார்பில் தூய்மை பணி அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்

புதுவை அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் நேற்று காலை கடற்கரை சாலையில் தூய்மை பணி நடந்தது. இதனை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2019-11-10 22:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம், காலநிலை மாற்றம் மற்றும் ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மை சங்கம் சார்பில் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. அமைச்சர் கந்தசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் அர்ஜுன் சர்மா, இயக்குனர் சுமிதா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள், பல்வேறு துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணி மேற்கொண்டனர். இதில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தினர் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.

புதுக்குப்பம்

இதே போல் அரியாங்குப்பத்தில் உள்ள புதுக்குப்பம் பாரடைஸ் கடற்கரையில் நடந்த தூய்மை பணியை மணவெளி தொகுதி எம்.எல்.ஏ. அனந்தராமன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சுழல் துறை அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை பணி மேற்கொண்டனர். இதே போல் வருகிற 17-ந் தேதி வரை தினமும் 2 மணி நேரம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் செய்திகள்