விருதுநகரில், கட்டிட காண்டிராக்டர் வெட்டிக் கொலை - பழிக்குப் பழியாக நடந்த பயங்கரம்

விருதுநகர் அல்லம்பட்டியில் பழிக்குப் பழியாக கட்டிட காண்டிராக்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-11-12 22:45 GMT
விருதுநகர்,

விருதுநகர் அல்லம்பட்டி மாத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம் என்ற சண்முக ராஜேஸ்வரன் (வயது 44). கட்டிட காண்டிராக்டரான இவர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வந்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அல்லம்பட்டியைச் சேர்ந்த முத்துக்காமாட்சி என்ற ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ளார்.

இதனைத் தொடர்ந்து முத்துக்காமாட்சி தரப்பினருக்கும், சண்முகராஜேஸ்வரன் தரப்பினருக்கும் அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ேநற்று இரவு 7 மணி அளவில் சண்முக ராஜேஸ்வரன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம கும்பல் சண்முக ராஜேஸ்வரனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.

இதில் அவர் அந்த இடத்திலேயே விழுந்து பரிதாபமாக இறந்தார். கொலை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது.

இது பற்றி தகவல் அறிந்த விருதுநகர் கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்தக் கொலை சம்பவம் பழிக்குப் பழியாக நடந்துள்ளது என்பதை உறுதி செய்தனர். சண்முக ராஜேஸ்வரனின் உடல் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து இம்மாதிரியான மோதல் சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும் அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் இம்மாதிரியான அசம்பாவிதங்கள் நடைபெறும் நிலை நீடிக்கிறது.

மேலும் செய்திகள்