மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தச்சுத்தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் தச்சுத்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-11-12 22:15 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் மணிமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் ( வயது 45). தச்சுத்தொழிலாளி. இவர் ஓரகடம் பகுதியில் இருந்து நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வேலை சம்பந்தமாக தேவரியம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

சாவு

லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்