சென்னை விமான நிலையம் எதிரில் மேம்பாலத்தில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரில் மேம்பாலத்தில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது.

Update: 2019-11-19 22:30 GMT
ஆலந்தூர்,

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கமலேஷ். இவர் தனது தாய், தம்பி  ஆகியோருடன் சேலத்தில் இருந்து சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் வந்தார். காரை சுந்தரமூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார். இந்தநிலையில் மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் வந்தபோது, திடீரென காரில் இருந்து புகை வர தொடங்கியது.

உடனே இதனையறிந்த குடும்பத்தினர் பதறி அடித்து கொண்டு காரில் இருந்து இறங்கினார்கள். அதற்குள் காரில் தீ பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.

இதையடுத்து பல்லாவரத்தில் இருந்து கிண்டி நோக்கி சென்ற வாகனங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் கார் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

இது பற்றி மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு காரில் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்