ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர் இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க கோரிக்கை

இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்கக்கோரி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

Update: 2019-11-23 23:00 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ராஜீவ்காந்தி மீனவர் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். மீனவர் சங்க தலைவர்கள் போஸ், எமரிட், சேசு, தேவதாஸ், சகாயம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசு அமைந்ததற்கு மீனவர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த சில நாட்களாக இலங்கை கடற்படையினர் தமிழக விசைப்படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் தாக்கி சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.

இதனால் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வரவுள்ள இலங்கை அதிபரிடம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

வேலை நிறுத்தம்

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்டு வருவதற்கு உரிய அனுமதி பெற்றுத்தர வேண்டும். மேலும் சேதமடைந்த படகுகளுக்கு அரசு சார்பில் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இந்திய-இலங்கை மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான பலதரப்பட்ட பேச்சுவார்த்தை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனவே இருநாட்டு மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் வேலை நிறுத்தமாக தொடரும் எனவும் மீனவர்கள் அறிிவித்துள்ளனர். மீனவர்கள் வேலை நிறுத்தத்தால் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நேற்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்