போலி ஆவணம் தயாரித்து பேராசிரியையிடம் நில மோசடி தஞ்சை மாவட்ட பதிவாளர் அலுவலக நிர்வாக பொறுப்பாளர் கைது

சிதம்பரத்தில் பல்கலைக்கழக பேராசிரியையிடம் நில மோசடி செய்த வழக்கில் போலி ஆவணம் தயாரித்து கொடுத்த தஞ்சை மாவட்ட பதிவாளர் அலுவலக நிர்வாக பொறுப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-23 23:15 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாலைக்கட்டி தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி உமாராணி (வயது 53). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

உமாராணி அதே பகுதி முத்தையாநகரில் 2,400 சதுர அடி பரப்பளவுள்ள மனை ஒன்றை கடந்த 1998-ம் ஆண்டு வாங்கினார். இதை எவ்வித உரிமையும் இல்லாமல் சிதம்பரம் தேரடி பிள்ளையார்கோவிலை சேர்ந்த ராதாகிரு‌‌ஷ்ணன் என்பவர் வேளங்கிப்பட்டை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு போலி ஆவணம் தயாரித்து கிரயம் செய்து கொடுத்துள்ளார்.

போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

இந்த நிலையில் உமாராணிக்கு சொந்தமான நிலத்தை பன்னீர்செல்வம் உரிமை கொண்டாடினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து உமாராணி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவை நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

துணை பதிவாளர் கைது

இதற்கிடையே நிலத்தை கிரயம் செய்து கொடுத்த ராதாகிரு‌‌ஷ்ணன் இறந்துவிட்டார். இதையடுத்து பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிதம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் துணை பதிவாளராக பணிபுரிந்த ராஜரத்தினம் என்பவர், உமாராணிக்கு சொந்தமான நிலத்துக்கு வில்லங்க சான்றிதழை போலியாக தயார் செய்து கொடுத்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து திண்டிவனம் மகாத்மா காந்தி நகரில் தனது வீட்டில் இருந்த ராஜரத்தினத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ராஜரத்தினம் தற்போது தஞ்சாவூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நிர்வாக பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்