திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - மழைநீரை அகற்ற கோரிக்கை

திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழகம் முன்பு தேங்கி உள்ள மழைநீரை அகற்ற கோரி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-23 22:30 GMT
திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பெரும்பாலான இடங்களில் பரவலான மழை பெய்தது. திருச்செந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவில் பலத்த மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

எனவே அங்கு தேங்கிய மழைநீரை வடிய வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள் சிலர் நேற்று காலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இதனால் சில வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை.

உடனே திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் விரைந்து சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் பொக்லைன் எந்திரம் மூலம் வாறுகாலை சீரமைத்து, மழைநீரை வடிய வைக்கும் பணி நடந்தது. பின்னர் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்