சேலம் சரகத்தில், கடந்த 10 மாதங்களில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 11 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

சேலம் சரகத்தில், கடந்த 10 மாதங்களில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 11 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-11-24 22:30 GMT
சேலம்,

சேலம் சரகத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், கிரு‌‌ஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியது, செல்போன் பேசிக்கொண்டு ஓட்டியது உள்ளிட்ட விதிமுறை மீறி வாகனம் ஓட்டி வருபவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டி வருபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்து வருகின்றனர்.

அதன்படி விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டி வந்ததாக சேலம் மாவட்டத்தில் 1,894 பேர், நாமக்கல்லில் 4,661 பேர் உள்பட சேலம் சரகத்தில் 11 ஆயிரத்து 78 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யக்கோரி போலீசார் அந்தந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர்.

ஓட்டுனர் உரிமம் ரத்து

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, சேலம் சரகத்தில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீப காலமாக ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வருபவர்களை பிடித்து அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் தொடர்ந்து விதிமுறை மீறி வாகனம் ஓட்டி வருபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி சேலம் சரகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 11 ஆயிரத்து 78 பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்து உள்ளனர், என்றனர்.

மேலும் செய்திகள்