திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா செடிகள் பொதுமக்கள் தகவலின்பேரில் போலீசார் அழித்தனர்

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை பொதுமக்கள் தகவலின்பேரில் போலீசார் அழித்தனர்.

Update: 2019-11-25 23:15 GMT
திருச்சி,

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான காலிமனைகள் உள்ளன. இந்த மனைகளை முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வந்தன. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம், காலிமனைகளில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் குப்பைகள் குவிந்து கிடந்தால் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.

இந்தநிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்து இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத இந்த இடத்தில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடந்தன. இந்த செடிகளுக்கு நடுவே ஆங்காங்கே கஞ்சா செடிகளும் வளர்ந்து இருந்தன. ேநற்று இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் அழித்தனர்

சமூகவிரோதிகள் யாரேனும் திட்டமிட்டு கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்தார்களா? அல்லது மர்ம நபர்கள் அங்கு அமர்ந்து கஞ்சா பயன்படுத்தியபோது, அதில் இருந்து சிதறிய விதைகள் மூலம் செடிகள் வளர்ந்ததா? என்பது தெரியவில்லை. உடனடியாக இது குறித்து தென்னூர் பகுதி மக்கள், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த ராயல்சித்திக் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், தில்லைநகர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், பொதுமக்கள் முன்னிலையில், அங்கு வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை அகற்றி அழித்தனர். மாநகராட்சிக்கு சொந்தமான அந்த இடத்தை தூய்மைப்படுத்தி காம்பவுண்டு சுவர் கட்டி பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று, அங்கு தூய்மை பணி மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்