கிணற்றில் விழுந்து கல்லூரி மாணவர் பலி குளிக்க இறங்கிய போது பரிதாபம்

கடத்தூர் அருகே குளிக்க கிணற்றில் இறங்கியபோது தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2019-11-25 23:00 GMT
கடத்தூர்,

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள திண்டலானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவருடைய மகன் முகே‌‌ஷ் (வயது 19). கோவையில் டிப்ளமோ அக்ரி 2-ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த மாணவர் நேற்று தங்களது விவசாய நிலத்தில் நெல் நடவு செய்ய உழவு பணியில் ஈடுபட்டார். பின்னர் அவர் குளிப்பதற்காக தோட்டத்தில் உள்ள கிணற்றில் படிக்கட்டு வழியாாக இறங்கினார். அப்போது நிலைதடுமாறி அவர் கிணற்றில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த முகே‌‌ஷ் தண்ணீரில் மூழ்கினார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முகேசை மீட்க முடியவில்லை. இதுகுறித்து தர்மபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து முகேசை மீட்க முயன்றனர். அப்போது மாணவர் சேற்றில் சிக்கி இறந்து விட்டது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் முகேசின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடத்தூர் போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்