அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-11-25 22:30 GMT
பந்தலூர்,

பந்தலூர் அருகே உள்ள அண்ணா நகரில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். ஆனால் அங்கு குடிநீர் வசதி சரிவர செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் நடைபாதைகள் உடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இது தவிர தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று அண்ணா நகர் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த அண்ணா நகர் பொதுமக்கள் நேற்று நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நகராட்சி பணி மேற்பார்வையாளர் சிவபாக்கியம் மற்றும் தேவாலா போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று போதிய நிதி ஒதுக்கப்படும். அதன்பின்னர் அண்ணாநகரில் போதிய அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்