திருவொற்றியூரில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி
திருவொற்றியூரில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் விம்கோ நகர் ரெயில் நிலையத்துக்கும், கத்திவாக்கம் ரெயில் நிலையத்துக்கும் இடையே 2 பேர் ரெயிலில் அடிபட்டு உடல் நசுங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற போலீசார், 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில் பலியான இருவரும் ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், கதிரி மண்டிலம், பட்டினம் பகுதியைச் சேர்ந்த குமார் (வயது 20) மற்றும் கங்கனா (70) என தெரியவந்தது.
மேலும் இவர்கள் இருவரும் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தார்களா? அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்தார்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.