வயலுக்கு சென்ற பெண் கொலை - போலீசார் தீவிர விசாரணை

சரத்திரக்குடி அருகே வயலுக்கு சென்ற பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-11-27 22:45 GMT
போகலூர்,

பரமக்குடி தாலுகா சத்திரக்குடி அருகே உள்ள எட்டிவயல் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி மனைவி தெய்வானை (வயது 52). இவர் எட்டிவயல் அருகில் விவசாயம் செய்து வந்தார். வயலுக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவர் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என வீட்டில் இருந்தவர்கள் எண்ணியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை வயல்வெளியில் தெய்வானை கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அந்த வழியாக சென்ற அவரது சகோதரி வயல்வெளியில் தெய்வானை இறந்து கிடப்பதைக்கண்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் சத்திரக்குடி போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது தெய்வானை காதில் அணிந்திருந்த தோடுகளை காணவில்லையாம். மேலும் அவரது ஆடைகளும் கிழிந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவரை நகைக்காக கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதனை தொடர்ந்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து இதில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயலுக்கு சென்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்