கன்னியாகுமரியில் நடுரோட்டில் வாலிபர்களை தாக்கிய போலீசார் சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோவால் பரபரப்பு

கன்னியாகுமரியில் நடுரோட்டில் வாலிபர்களை போலீசார் தாக்கினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-27 23:00 GMT
கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் வாகன சோதனையின் போது சில நேரங்களில் போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம், மோதல் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில் போலீசார் நடுரோட்டில் 2 வாலிபர்களை தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. லத்தியாலும், கைகளாலும் போலீசார் ஆவேசமாக தாக்கி ஜீப்பில் ஏற்றுவது போல் காட்சிகள் பதிவாகி உள்ளது.

விசாரணை

இந்த சம்பவம் கன்னியாகுமரி தெற்கு ரதவீதியில் நடந்து உள்ளது. இதனை யாரோ ஒருவர் சம்பவம் நடந்த போது, செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். இந்த வீடியோ அங்கு பரபரப்பாக பேசப்பட்டது.

கன்னியாகுமரியில் போலீசார் நடுரோட்டில் வாலிபர்களை சரமாரியாக தாக்கியது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்