திருமணமான 3 ஆண்டில் பெண் மர்ம சாவு உடலை தோண்டி எடுத்து விசாரணை

எரவாஞ்சேரியில், திருமணமான 3 ஆண்டில் பெண் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை தோண்டி எடுத்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2019-11-28 22:15 GMT
குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மணவாளநல்லூர் வேளாளர் தெருவை சேர்ந்தவர் ப‌ஷீர் முகமது. இவருடைய மனைவி சர்மிளா பேகம்(வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த நிலையில் ப‌ஷீர்முகமது, அவருடைய தந்தை ஜெகபர் ரகுமான், தாய் கமர்நி‌ஷா ஆகியோருக்கும் சர்மிளாபேகத்திற்கும் இடையே அடிக்கடி சண்டை வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சர்மிளா பேகம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

உடல் தோண்டி எடுப்பு

இதையடுத்து இவருடைய உடலை ஜமாத்தினர் எரவாஞ்சேரி மொய்தீன் மைதீன்ஜாமியா பள்ளிவாசலில் அடக்கம் செய்து விட்டனர். இதுகுறித்து சர்மிளாபேகத்தின் அண்ணன் ஆவூரை சேர்ந்த முகமது அசாருதீன் எரவாஞ்சேரி போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், தனது தங்கையின் சாவில் மர்மம் உள்ளதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் உதவி கலெக்டர் ஜெயபிரீதா, சர்மிளா பேகம் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்றார்.

பின்னர் அவரது உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த சர்மிளா பேகத்திற்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் ஜெயபிரீதா தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்