நாகையில் கடல் சீற்றம்: பைபர் படகு கவிழ்ந்து மீனவர் மாயம் தேடும் பணி தீவிரம்

நாகையில் கடல் சீற்றத்தால் பைபர் படகு கவிழ்ந்து மாயமான மீனவரை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2019-11-28 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலைகள் 10 அடி உயரத்தில் எழுகிறது. நேற்று முன்தினம் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-த்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் தங்களது படகுகளை கடுவையாற்றுக்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் மாலையில் கடல் சீற்றம் குறைந்தது.

படகு கவிழ்ந்தது

இதையடுத்து நள்ளிரவில் விசைப்படகு மீனவர்களும், நேற்று அதிகாலையில் பைபர் படகு மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர். பின்னர் மீன்பிடித்து கொண்டு மீனவர்கள் மதியம் 12 மணி அளவில் கரை திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் கீச்சாங்குப்பம் சேவாபாரதி நகரை சேர்ந்த வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியைச் சேர்ந்த முகுந்தன்(21) மற்றும் அவருடைய சகோதரர் முருகவேல் (18) ஆகிய 3 மீனவர்களும் மீன்பிடித்து கொண்டு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மீன்பிடி துறைமுக முகத்துவாரம் அருகே வந்த போது கடல் சீற்றம் காரணமாக பைபர் படகு தூக்கி வீசப்பட்டு கவிழ்ந்தது.

மீனவர் மாயம்

இதில் கடலில் தத்தளித்த வேலாயுதம், முகுந்தன் ஆகிய 2 பேரையும் அங்கிருந்த மீனவர்கள் மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கடலோர காவல் படையினர் மீட்டனர். மீனவர் முருகவேல் கிடைக்கவில்லை. படகு கவிழ்ந்த தகவல் அறிந்த அக்கரைப்பேட்டை, சீச்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அந்த பகுதியில் திரண்டனர். மாயான மீனவர் முருகவேலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்