செல்போனை அதிக நேரம் பயன்படுத்தினால் தலைவலி வரும் மருத்துவக்கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் தகவல்

செல்போனை அதிக நேரம் பயன்படுத்தினால் தலைவலி வரும் என்று தஞ்சை மருத்துவக்கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் டாக்டர் கூறினார்.

Update: 2019-11-28 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் நரம்பியல் துறை சார்பில் தலைவலி பிரச்சினைகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று நடந்தது.

இந்த கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சிக்கு பேராசிரியர் டாக்டர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். நரம்பியல் டாக்டர் சேகர் முன்னிலை வகித்தார். நரம்பியல் துறை பேராசிரியர் டாக்டர் தங்கராஜ் வரவேற்றார்.

கருத்தரங்கில் மருத்துவக்கல்லூரி சூப்பிரண்டு டாக்டர் பாரதி, துணை முதல்வர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கருத்தரங்கில் மும்பையை சேர்ந்த தலைவலி சிகிச்சை நிபுணர் ரவிசங்கர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

செல்போனை அதிக நேரம் பயன்படுத்தினால்...

‘‘தலைவலி பல வழிகளில் வருகிறது. உணவு பழக்க வழக்கம், நேரம் தவறி சாப்பிடுவது, செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவது போன்றவற்றால் ஏற்படுகிறது.

மேலும் பரம்பரையாகவும் வருகிறது. இதற்கு ஸ்கேன் எடுத்து பார்த்தால் அதில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் தலைவலி தொடர்ந்து இருக்கும்.

உரிய சிகிச்சை

தலைவலிக்கு வலிமாத்திரைகளை உட்கொண்டால் தீர்வாகாது.

எனவே உடனடியாக டாக்டர்களிடம் காண்பித்து உரிய சிகிச்சை பெற்றால் தீர்வு காணலாம். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் இதற்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது’’என்றார்.

மேலும் கருத்தரங்கில் டாக்டர்கள் நமசிவாயம்குப்புசாமி, மத்தியாஸ்ஆர்தர், பன்னீர், பராந்தகன், ராஜேந்திரன், வாஞ்சிலிங்கம், கண்ணன், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கருத்தரங்கம் முடிவில் மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது.

முடிவில் டாக்டர் இளங்கோவன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்