திருச்செந்தூர் அருகே, மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி

திருச்செந்தூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி உயிரிழந்தாள்.

Update: 2019-11-30 23:00 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் அருகே கீழ நாலுமூலைக்கிணறு முருகன்குறிச்சியைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 43). இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் சொந்தமாக ஆட்டோ வாங்கி, அங்கு வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

இவருடைய மனைவி ரோஸ்லின். இவர்களுக்கு வசந்தலிங்கம் (21) என்ற மகனும், அனு (7) என்ற மகளும் உண்டு. ரோஸ்லின் தன்னுடைய மகன், மகளுடன் முருகன்குறிச்சியில் வசித்து வந்தார்.

மகன் வசந்தலிங்கம், செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகள் அனு, கீழ நாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் அனுவுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. எனவே, ரோஸ்லின் தன்னுடைய மகளை சிகிச்சைக்காக பிச்சிவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். ஆனாலும் அனுவுக்கு காய்ச்சல் குணமாகாததால், அவளை திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

எனினும் அனுவுக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அவளை திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே, அனுவின் உடல்நிலை மோசம் அடைந்ததால், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் அனு உயிரிழந்தாள். இறந்த அனுவின் உடலைப் பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. திருச்செந்தூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்