பதவி ஏற்றபோது மரபு மீறல் குற்றச்சாட்டு: பட்னாவிசுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி

மராட்டிய முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த வியாழக்கிழமை பதவி ஏற்றார். அவருடன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் என மொத்தம் 6 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

Update: 2019-12-01 00:14 GMT
மும்பை, 

உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்ற போது மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பெயரை கூறி பதவி ஏற்றார். மந்திரிகள் பதவி ஏற்ற போது பால்தாக்கரே, சோனியா காந்தி, சரத்பவார் ஆகியோரின் பெயரில் பதவி ஏற்றனர்.

இந்த விஷயத்தில் பதவி ஏற்றவர்கள் மரபை மீறி விட்டதாக பாரதீய ஜனதா சட்டமன்ற குழு தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று சட்டசபையில் குற்றம் சாட்டினார். மேலும் இந்த விதிமுறை மீறல்களை கவர்னரின் கவனத்துக்கு கொண்டு சென்று முறையிடுவோம் எனவும் கூறினார்.

இதற்கு சட்டசபையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்து பேசினார். அப்போது, நாங்கள் சத்ரபதி சிவாஜியின் பெயரை கூறும் போது நீங்கள் தடுமாற்றமாக உணர்ந்தால், அந்த பெயரை நான் மீண்டும், மீண்டும் உச்சரிப்பேன். சத்ரபதி சிவாஜி மற்றும் பெற்றோரின் பெயரை கூற விரும்பாதவர்கள் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என்று கூறினார்.

மேலும் செய்திகள்