இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

விஜயமங்கலத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-12-01 22:30 GMT
பெருந்துறை, 

பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் கே.எஸ்.வி. குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மனைவி லதா (வயது 23). கணவன்-மனைவி இருவரும் கூலி தொழிலாளர்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நந்தகுமார் வேைலக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் லதாவும் அவருடைய தந்தை ரவிச்சந்திரனும் இருந்தார்கள். இந்தநிலையில் வீட்டில் உள்ள அறைக்கு சென்ற லதா திடீரென விஷம் குடித்துவிட்டார். இதை அறிந்த அவருடைய தந்தை ரவிச்சந்திரன் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் லதா இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இதுபற்றி பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து லதா எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நந்தகுமாருக்கும், லதாவுக்கும் திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆகியிருப்பதால் ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்