பள்ளி மாணவிகளிடம் சில்மி‌‌ஷம்: தலைமறைவான ஆசிரியருக்கு போலீஸ் வலைவீச்சு

பள்ளி மாணவிகளிடம் சில்மி‌‌ஷம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவான ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-12-01 23:00 GMT
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தர்மபுரியை சேர்ந்த பிரகாஷ்குமார் (வயது54) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பள்ளி வகுப்பறையில் 2 மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், வட்டார கல்வி அலுவலர் உமாராணி மற்றும் மகேந்திரமங்கலம் போலீசார் ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பான அறிக்கையை, தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணனிடம் அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஆசிரியர் பிரகாஷ்குமாரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் மாணவிகளின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆசிரியர் பிரகாஷ்குமார் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, புகார் கூறப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

மேலும் தலைமறைவான ஆசிரியர் பிரகாஷ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புகாருக்குள்ளான ஆசிரியர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்