மதுகுடித்ததை பெற்றோர் கண்டித்ததால் பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை தக்கலை அருகே பரிதாபம்

தக்கலை அருகே மதுகுடித்ததை பெற்றோர் கண்டித்ததால் பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-12-01 23:00 GMT
பத்மநாபபுரம்,

தக்கலை அருகே பள்ளியாடி குழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி, போதகர். இவருக்கு மனைவியும், மிஸ்பா சாமுவேல் (வயது 22) என்ற மகனும் இருந்தனர்.

பட்டதாரியான மிஸ்பா சாமுவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்து வந்தனர். இதனால், அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.

தீக்குளிப்பு

எனினும் மிஸ்பா சாமுவேல் மதுகுடிப்பதை நிறுத்தவில்லை. அவர் தொடர்ந்து குடித்து வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று மதுகுடித்து வந்த மிஸ்பா சாமுவேலை பெற்றோர் மீண்டும் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீ்ட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனே தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக நெய்யூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சாவு

இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி மிஸ்பா சாமுவேல் பரிதாபமாக இறந்தார். பின்னர், இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மிஸ்பா சாமுவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுகுடித்ததை பெற்றோர் கண்டித்ததால் பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்