கள்ளக்காதலன் அழைப்பதாக வரவழைத்து, ஒரு பவுன் நகைக்காக இளம்பெண்ணை கம்பியால் அடித்துக்கொன்றது அம்பலம்

திருமங்கலம் அருகே இளம்பெண் கொலை வழக்கில் பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர். ஒரு பவுன் நகைக்காக கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

Update: 2019-12-01 23:00 GMT
திருமங்கலம்,

திருமங்கலம் கூடக்கோவில் அருகே உள்ள சின்னஉலகாணியைச் சேர்ந்த பெரியகருப்பன் மனைவி முத்துமாரி (வயது26). சில தினங்களுக்கு முன்பு இவரை சிலர் அடித்து கொலை செய்து கண்மாய்க்கரையில் போட்டு விட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் என 30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தீவிர விசாரணையை தொடர்ந்து இந்த கொலை வழக்கில் கூடக்கோவிலை சேர்ந்த ராஜா என்பவரது மகனும் கூலித்தொழிலாளியுமான ஆதீஸ்வரன்(23), முத்துராமலிங்கம் மகன் ராம்குமார்(18), சின்னஉலகாணியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவி முனியம்மாள்(27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

முத்துமாரியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து ஆதீஸ்வரன் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். முத்து மாரியின் நடவடிக்கை சரியில்லாததால் அவரிடம் பேச வேண்டாம் என்று தனது காதலியிடம் கூறியதால் அவருக்கும் முத்துமாரிக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் முத்துமாரியின் உறவினரான முனியம்மாளின் நகையை வாங்கி அடகு வைத்து பணம் பெற்று இருந்துள்ளார். பணத்தை முனியம்மாள் கேட்டதால் முத்துமாரியை நைசாக அழைத்து வந்து கொலை செய்து அவரது நகையை பறிக்க திட்டமிட்டுள்ளார். பணம் கிடைக்கும் என்பதால் முனியம்மாள் முத்துமாரியின் வீட்டுக்கு சென்று கள்ளக்காதலன் அழைப்பதாக கூறியுள்ளார்.

அதனை நம்பிய முத்துமாரி கள்ளக்காதலனை சந்திக்க கண்மாய் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தனது நண்பர் ராம்குமாருடன் சேர்ந்து இரும்பு கம்பியால் முத்துமாரியை தாக்கி கொலை செய்து அவர் கழுத்தில் கிடந்த 1 பவுன் நகையை ஆதீஸ்வரன் பறித்துள்ளார்.இவ்வாறு ஆதீஷ்வரன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்