தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 5,291 பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 291 பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

Update: 2019-12-04 22:45 GMT
தூத்துக்குடி, 

தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் 2017–2018–ம் ஆண்டில் 2 ஆயிரத்து 534 பெண்களுக்கு ரூ.6 கோடியே 33 லட்சம் மானிய விலையிலும், 2018–2019–ம் ஆண்டில் 2 ஆயிரத்து 489 உழைக்கும் பெண்களுக்கு ரூ.6 கோடியே 24 லட்சம் மானிய விலையிலும், 2019–2020–ம் ஆண்டில் இதுவரை 268 உழைக்கும் பெண்களுக்கு ரூ.67 லட்சம் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு உள்ளது.

மொத்தம் இதுவரை 5 ஆயிரத்து 291 உழைக்கும் பெண்களுக்கு ரூ.13 கோடியே 24 லட்சம் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி மூலம் இலவசமாக ஸ்கூட்டர் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து உழைக்கும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்