ரூ.9 கோடியில் அழகு படுத்தப்படும் கன்னியாகுமாி கடற்கரை பூங்கா

கன்னியாகுமரியில் ரூ.9 கோடியில் அழகு படுத்தப்படும் கடற்கரை பூங்கா சபரிமலை சீசனிலேயே பயன்பாட்டுக்கு கொண்டுவர சமூக ஆர்வலர்கள் வலியுறுத்து கிறார்கள்.

Update: 2019-12-04 22:45 GMT
கன்னியாகுமாி,

கன்னியாகுமாி உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. இதனால் இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். கன்னியாகுமாிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் மற்றும் மறையும் காட்சியை கடற்கரையில் நின்று பார்த்து ரசிக்கிறார்கள்.

பின்னர், படகில் சென்று கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிடுகிறார்கள். இங்குள்ள முக்கடல் சங்கமத்தில் குளித்து மகிழும் சுற்றுலாபயணிகள் காந்தி, காமராஜர் மண்டபங்களுக்கும். பூங்காக்களுக்கும் சென்று பொழுதை கழிக்கிறார்கள்.

ரூ.9 கோடி

இதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் மூலம் ரூ.9 கோடியில் கன்னியாகுமரி கடற்கரை பூங்காவை அழகுப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் கன்னியாகுமாி கடற்கரை சாலையில் காட்சி கோபுரம் முதல் சன்செட் பாயிண்ட் சிலுவைநகர் வரை கடற்கரை அழகு படுத்தப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் அலங்கார புல்வெளிகள், சுற்றுலா பயணிகள் கடல் அழகை ரசிக்க கலையழகுமிக்க நிழற்குடையுடன் கூடிய இருக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும், சூரியசக்தி மூலம் இயங்கும் அலங்கார மின்விளக்குகளும் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான பணிகள் முடிவடைந்த போதிலும் கடற்கரை பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வில்லை. இதனால், சுற்றுலாபயணிகளும், பொதுமக்களும் இரவில் கடல்அழகை ரசிக்க முடியாத நிலை உள்ளது.

பயன் பாட்டுக்கு...

கன்னியாகுமாியில் அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி தினமும் ஏராளமான அய்யப்ப பக்தர்களும் சுற்றுலாபயணிகளும் கன்னியாகுமாிக்கு வருகிறார்கள்.

எனவே, உடனே அழகு படுத்தும் பணியை முடித்து, சபரிமலை சீசனிலேயே கடற்கரை பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

மேலும் செய்திகள்