குழந்தையுடன் பெண்ணை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை - ஆரணி கோர்ட்டு தீர்ப்பு

தூசி அருகே குழந்தையுடன் பெண்ணை கொன்ற சம்பவத்தில் தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-12-04 22:45 GMT
ஆரணி, 

ஆரணியை அடுத்த குண்ணத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவருடைய மனைவி வள்ளி (வயது 26). இவர்களுக்கு 1½ வயதில் பவானி என்ற பெண் குழந்தை இருந்தது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக வள்ளி நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றுவிட்டார்.

பொன்னாமங்கலம் கிராமத்திற்கு வள்ளி விறகு வெட்டுவதற்கு சென்றார். அப்போது அவருடன் விறகு வெட்டச்சென்ற தூசியை அடுத்த நரசாமங்கலம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (38) என்பவருடன் வள்ளிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 19.6.2006 அன்று வள்ளியை குடும்பம் நடத்த கண்ணன் அழைத்துள்ளார். அதற்கு வள்ளிமறுப்பு தெரிவித்துள்ளார்.

உடனே வள்ளியிடமிருந்த அவருடைய குழந்தையை தூக்கிக்கொண்டு கண்ணன் நரசமங்கலத்திற்கு சென்றுள்ளார். அப்போது வள்ளி கண்ணனிடம் இருந்து குழந்தையை பிடுங்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், வள்ளியின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்தார். பின்னர் தலையை அங்குள்ள முள்வேலி பகுதியில் போட்டுவிட்டு, உடலை கல்லைக்கட்டி கிணற்றில் போட்டார். பின்னர் குழந்தையையும் கொலை செய்தார்.

இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி கணேசன் வழக்கை விசாரித்து கண்ணனுக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். கொலையை மறைத்ததற்காக ஒரு வருடம் சிறைத்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார். இதனை தொடர்ந்து கண்ணன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்