வெங்கரையில் விவசாயியின் தோட்டத்தில் 600 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு - மர்ம நபர்கள் அட்டகாசம்

பரமத்தி வேலூர் அருகே வெங்கரையில் விவசாயியின் தோட்டத்தில் 600 வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-12-04 22:00 GMT
பரமத்தி வேலூர், 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரையை சேர்ந்தவர் முருகன் (வயது 55), விவசாயி. இவர் வெங்கரை காவிரி ஆற்றின் கரையோரத்தில் 50 சென்ட் நிலத்தில் சுமார் 500 வாழை பயிரிட்டு இருந்தார். இதேபோல கோரைக்காட்டு ஓரத்தில் சுமார் 100 வாழை பயிரிட்டு இருந்தார். இந்த மரங்கள் கடந்த 6 மாதங்களாக வளர்ந்து வாழைத்தார் போடும் சூழ்நிலையில் இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை ஆற்றுப்பக்கம் சென்றவர்கள் விவசாயி முருகன் தோட்டத்தில் வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு இருப்பதாக அவருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த முருகன் 600 வாழைமரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இது குறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி உத்தரவின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

வாழை மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்