கீரமங்கலத்தில் ரஜினிகாந்த் பிறந்த நாளை இனிப்புடன் வெங்காயம் வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்

கீரமங்கலத்தில் ரஜினிகாந்த் பிறந்தநாளை இனிப்புடன் வெங்காயத்தையும் வழங்கி ரசிகர்கள் கொண்டாடினர்.

Update: 2019-12-08 22:30 GMT
கீரமங்கலம்,

ரஜினிகாந்தின் பிறந்த நாளை யொட்டி புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள பழமையான மெய்நின்றநாதர் கோவிலில் மாவட்ட பொறுப்பாளர் சகாயம் தலைமையிலும், தமிழ்செல்வன், தங்கராசு, மகளிரணி அமுதா ஆகியோர் முன்னிலையிலும் ரஜினிகாந்த் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தனர். பின்னர் மெய்நின்றநாதர் மற்றும் ஒப்பிலாமணி அம்பிகைக்கு சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் வெங்காயத்தை வழங்கி கொண்டாடினர். முன்னதாக ஒரு தாம்பாளத்தில் பூ, பழம், இனிப்பு ஆகியவற்றுடன் வெங்காயமும் வைத்து ஊர்வலமாக வந்தனர்.

வெங்காயம்தான் கிடைப்பதில்லை

இதுகுறித்து மாவட்ட பொறுப்பாளர் சகாயம் கூறுகையில், ரஜினிகாந்த் பிறந்த நாளை இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது வழக்கம். ஆனால் தற்போது இனிப்புகளை விட வெங்காயம் தான் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. காரணம், அதன் விலையேற்றம். அதனால் தான் இனிப்புடன் சேர்த்து வெங்காயத்தையும் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினோம். இதேபோல மாவட்டம் முழுவதும் இனிப்புடன் வெங்காயத்தை வழங்கி ரஜினிகாந்த் பிறந்த நாளை கொண்டாடுவோம் என்றார்.

மேலும் செய்திகள்