கஞ்சா வேட்டையில் சிக்கினர்: பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கைது

கஞ்சா வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், பயங்கர ஆயுதங்கள் மற்றும் கஞ்சாவுடன் வீட்டில் பதுங்கி இருந்த 4 பேரை கைது செய்தனர்.

Update: 2019-12-08 23:00 GMT
திருவொற்றியூர்,

வடசென்னை பகுதியில் ஒரு கும்பல் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமிக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர், திருவொற்றியூர் போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கஞ்சா விற்பவர்களை பிடிக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் தனிப்படை போலீஸ்காரர் அமுதபாண்டி, கஞ்சா விற்பனை செய்யும் திருவொற்றியூரைச் சேர்ந்த கமலக்கண்ணன்(வயது 40) என்பவரிடம் சாதாரண உடையில் சென்று தனக்கு கஞ்சா வேண்டும் எனக்கேட்டார். அவரும், போலீஸ்காரர் என தெரியாமல் அமுதபாண்டிக்கு கஞ்சா விற்பனை செய்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த தனிப்படை போலீசார், கஞ்சா வியாபாரி கமலக்கண்ணனை மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், திருவொற்றியூர் திலகர் நகர் பகுதியில் உள்ள தமிழரசன் என்பவரது வீட்டில் மொத்தமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கூறினார்.

இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த வீட்டை சோதனையிட்டனர். அங்கு தமிழரசன் (20), டோரி ராஜேஷ் (32) மற்றும் பிரபாகரன் (24) ஆகிய மேலும் 3 பேர் கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரிந்தது. அவர்களையும் கைது செய்த போலீசார், வீட்டில் பதுக்கி வைத்து இருந்த கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

கைதான 4 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், டோரி ராஜேஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் மீது பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

எனவே இவர்கள், அந்த வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி, வேறு ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட சதி திட்டம் தீட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்