கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நயன்தாரா காதலனுடன் சாமி தரிசனம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காதலன் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.

Update: 2019-12-09 23:00 GMT
கன்னியாகுமரி,

தமிழில் ஐயா, சந்திரமுகி, பிகில் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நயன்தாரா. இவர்நடிகர் சிம்புவை காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை விட்டு பிரிந்தார். அதன்பிறகு நடிகர் பிரபுதேவாவுடன் நடித்த போது அவரை காதலிக்க தொடங்கினார். இருவரும் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவரை விட்டு சில ஆண்டுகளில் பிரிந்தார்.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் இணைந்து இருப்பது போன்ற படங்களை தங்களது டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி வெளிட்டு வருகின்றனர்.

சாமி தரிசனம்

இந்தநிலையில் நடிகை நயன்தாரா, தனது காதலன் விக்னேஷ்சிவனுடன்நேற்று மாலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தார்.

அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, பகவதி அம்மன் சன்னதி, தர்ம சாஸ்தா சன்னதி, சூரிய பகவான் சன்னதி ஆகியவற்றில் பய பக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதற்கிடையே நயன்தாரா வந்திருப்பதை அறிந்ததும் ஏராளமான ரசிகர்கள் கோவில் முன்பு திரண்டனர். அவர்கள் நயன்தாராவை பார்க்க முண்டியடித்து கொண்டு ஆர்வம் காட்டினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.

இதைதொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர், போலீசார் நயன்தாராவையும், விக்னேஷ் சிவனையும் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து காரில் அனுப்பி வைத்தனர்.

திருமண தேதி?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இரண்டாவது திருமணம் செய்வதற்கு முன்பு குமரி மாவட்டத்திற்கு வந்து கன்னியாகுமரி, சுசீந்திரம் கோவில்களில் சாமி தரிசனம் செய்து சென்றார்.

இந்தநிலையில், தற்போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஜோடியாக கன்னியாகுமரி கோவிலுக்கு வந்துள்ளதால் விரைவில் திருமண தேதியை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்