குலசேகரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது; நாட்டு துப்பாக்கி பறிமுதல்

குலசேகரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-12-09 23:00 GMT
குழித்துறை,

குலசேகரம் அருகே மணலோடை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மார்த்தாண்டத்தில் உள்ள மது விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விமலா மற்றும் போலீசார் மணலோடை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு வனப்பகுதியில் ஒருவர் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அவர் தப்பி ஓட முயன்றார்.

உடனே, போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை ேசர்ந்த குமார் (52) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவர் காய்ச்சி வைத்திருந்த ஒரு லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

நாட்டு துப்பாக்கி

தொடர்ந்து, அவரது உடமைகளை போலீசார் சோதனை செய்த போது, நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததை கண்டனர். இதையடுத்து துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து மது விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு துப்பாக்கியை எதற்காக வைத்திருந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்